Skip to main content

ஆதி வெள்ளறை

         மூன்றாவது முறையாக அலாரத்தை அனைத்தபோது மணி 6 அடித்திருந்தது, இங்க் பில்லெரில் ஒவ்வொரு துளியாக உரிவது போல் நீளம் நீங்கி வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று கிளம்பி பேருந்து நிறுத்தத்தில் ஒரு டீ குடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது  துறையூர் பேருந்து வந்ததும் 2 மூட்டைகளை ஏற்றுக்கொள்ள சொல்லி நடத்துனரிடம் பாட்டி சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். சுவாரசியமா நடந்து கொண்டிருந்த சண்டையை இடைமறித்து திருவெள்ளறை கோவில் போகுமா என்று கேட்டபோது "போகும் பின்னாடி ஏறுப்பா" என்றவர் கடைசி படியில் கால்வைத்தபோது என்ன நினைத்தாரோ தெரியவில்லை "கோவில் போகாது வளைவுல இருந்து நடந்து போங்க" என்றார் சரி என்று சொல்லி, ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன் நல்லவேளையாக பேருந்தில் ஒலிபெருக்கி ஒன்றுமில்லை. காலை அமைதியை குலைக்காமல் ஊர்ந்து சென்றது.

        இருபுறமும் கரைதொட்டு ஓடும் கொள்ளிடத்தை பார்த்தபோது வாழ்நாள் முழுக்க வறுமையில் வாடிய ஒரு மனிதன் ஊருக்கெல்லாம் செல்வம் கொழித்து பெருகுவது போன்று கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. ஓட்டுநரும் வேடிக்கை பார்த்தபடியே பொறுமையாக மி க பொ று மை யாக ஓட்டிச் சென்றார். சென்னை நேப்பியர் பாலத்தை நகலெடுத்து கொள்ளிடம் பாலத்தின் இருபுறமும் அரை வட்ட வளைவுகளை கட்டிவிட்டனர். வருடம் ஒரு பொழுது முழுக் கொள்ளளவை எட்டும் காட்சியை கூட முழுமையாக பார்க்கமுடியாத படி.

        மண்ணச்சநல்லூர் பொன்னி என்று அடிக்கடி கேட்கும் வார்த்தையின் பொருள் அப்போது தான் புரிந்தது, இருமருங்கும் நெல் வயல்கள் பச்சையில் உள்ள அனைத்து நிறங்களிலும் செழித்திருந்தது. சரியாக Google Maps ல் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலுக்கு நான்கு கிலோமீட்டர் தூரம் என கட்டிக்கொண்டிருந்தபோது சட்டென்று வண்டி நின்றதால் இங்கிருந்தே நடந்துசெல்லவேண்டும் என்றெண்ணி இறங்கப்போனபோது நடத்துனர் "இன்னும் போகணும் 5 நிமிஷம் இருங்க சாப்பிட்டு வந்துர்ரோம்" என்று சொல்லி இறங்கிச் சென்றனர். 

        மீண்டும் வண்டித்தொடங்கி அவர் சொன்னதுபோல சரியாக 5 நிமிடத்தில் நுழைவு வாயிலில் இறக்கிவிட்டனர். ஒருகிலோமீட்டர் உள்ளே நடந்து சென்றபின் தமிழகத்தில் எஞ்சியுள்ள ஒரே ஹொய்சள பாணி (முழுமை பெறாத) கோபுரத்தை காணமுடிந்தது. ஒரு முழு கோபுரத்தை சிரியவடிவில் பல உருவங்கள் செய்து அவை அனைத்தையும் ஒன்றிணைத்து கட்டப்பட்டது போன்ற வடிவமைப்பு.  சிறு திரு அல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒருவர் இன்னும் கருவறை திறக்கவில்லை என்று வாசலில் யாரையோ தேடிக்கொண்டிருந்தார்.ஏழரை மணியாகியும் இன்னும் சில சன்னதிகள் திறக்கப்படவில்லை. 


        
        தேர்வு அறைக்குள் கடைசி நிமிடத்தில் நுழையும் குழந்தையை போல்  அர்ச்சகர் ஒருவர் சாவிக் கொத்தோடு வந்துகொண்டிருந்தார். அனைத்து கோணத்திலும் கோபுரத்தை படம் பிடித்துவிட்டு உள்ளே சென்றேன். "கொள்ளிடம் முழுசும் தண்ணி போகுது ஆனா குடிக்க தண்ணி ரெண்டுநாளா வரல எங்கயோ குழாய் உடைப்பாம்" என்று இன்னொருவர் தாமதத்திற்கு காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்". ஆதித் திருவெள்ளறை ஜோதி திருவானைக்காவல் கிளி சொல்லி கண்டடைந்த திருவரங்கம் என்னும் ஓர் சொலவடை உண்டு. இக்கோவிலை சிபிச் சக்கரவர்த்தி கட்டியதாக ஐதீகம் கோவில் புனரமைப்பு பணிகளுக்காக வாசலில் ஒரு கீற்றுக் கொட்டகை "lime mortar Grinding Machine " என்று ஒரு அறை முழுக்க வெள்ளை துகள்களாக சிதறிக் கிடந்தது.

                                    

        வெண் மணலாலான சிறு குன்றின் மீது அமைந்துள்ள ஆலயம். தை முதல் ஆனி வரை உத்ராயண வாசல், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் என இரண்டு வாயில்கள். இப்போது ஆடி மாதமாதலால் தட்சிணாயன வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு படியேறி செல்லவேண்டும். நின்ற கோலத்தில் பெருமாளும் வலது புரம் தாயாரும் இடது புரம் தவம் செய்யும் கோலத்தில் மார்க்கண்டேய மகரிஷியும். அவருக்கு பின் மனித உருவத்தில் கருடாழ்வாரும் தாயாருக்கு பின் ஆதிசேஷனும் மூலவருக்கு முன்  உற்சவர் சிலைகளும் என கருவறை முழுக்க வைகுண்டம் போன்று விக்ரகங்கள். உலகில் உள்ள கருமை அனைத்திற்கும் ஆதி கருமை என்று ஒன்றிருக்குமாயின் அந்த கருமை நிறத்தில் இருந்தது புண்டரீகாக்ஷப் பெருமாள் திருவுருவம். நாலாயிரம் பிரபந்தங்களோடு நிறுத்தியது தவறு இன்னும் ஒரு நான்கு லட்சம் பாடியிருக்கலாம் என்று தோன்றும் சிலிர்ப்பை தந்தது. மூலஸ்தானத்திற்கு இடப்புறம் பெரியாழ்வார் திருமொழி அச்சிடப்பட்ட பதாகை வைக்கப் பட்டிருந்தது. 



        மூலஸ்தானத்தை சுற்றிவரும் பாதையில் தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் மற்றும் தசாவதார சன்னதி முதலானவையும், ஐந்தாம் பிரகாரத்தில் மார்க்கண்டேயர் தவம் செய்ததாக சொல்லப்படும் குகையும், ஸ்வஸ்திக் வடிவிலான குளத்தையும் காணமுடியும். ஆலயம் முழுக்க கிளிகளின் கீச்சிடலும் குரங்குகளும் மயில் அகவல்களும் கேட்டபடியே இருந்தது. நூறு கிளிக்கு ஒரு மனித உருவம் என்ற அளவில் கூட மனித நடமாட்டம் அல்லது கோவில். வைகுண்ட ஏகாதசிக்கு நாள் முழுக்க காத்திருந்தும் ஒரு நொடியில் கால் பங்குநேரம் கூட நிற்க முடியாத திருவரங்கம் நினைவிற்கு வந்தது. 


                                                                                                                            - மனோ 

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...