மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள் நண்பர் லால்குடி தினேஷ் எழுதிய ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்களின் " மரக்கடை மாமியார் முதலிய கதைகள்" நூலின் மதிப்புரை. தமிழில் செவ்வியல் இலக்கியம் எந்த அளவு உள்ளதோ அதே அளவிற்கு நாட்டார் இலக்கியமும் உள்ளது. சுவடிகளில் மறைந்து கிடந்த செவ்விலக்கியத்தை தேடிக் கண்டடைந்து பதிப்பிக்கப்பட்டு அதன் மறுமலர்ச்சி உருவான காலத்திற்கு சற்று பிந்தி நாட்டார் இலக்கியமும் அதிக அளவில் பதிப்பிக்க படுகிறது. அதில் முதலில் நாட்டார் மரபில் வாய்மொழியாக பல வடிவங்களில் உலவும் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டார் ஆய்வுகள் என நீளும் மரபில் இப்போது இருக்கும் பெரும் ஆளுமை அ.கா.பெருமாள் அவர்கள். அவர் தொகுத்த 29 கதைகள் அடங்கிய நூல் இது. இதை பரிசல் புத்தக நிலையம் 2024-ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை அ. கா .பெருமாள் அவர்களுக்கு தோல் பாவை கூத்து கலைஞர்கள் சுப்பையா ராவ் மற்றும் பரமசிவராவ் கூறியுள்ளனர். அ. கா .பெருமாள் இந்த இரு கலைஞர்களுடனும் நெருங்கி பழகி அவர்களோடு கூத்து நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றுள்ளார...