மூத்தோளின் கதை முற்கால சோழர் கோயில்கள் பலவற்றிலும் பிரம்மாண்டமான சிற்பமாக பல நுணுக்கங்களுடன் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி சிலை இன்று ஏன் கைவிடப்பட்டு கிடக்கிறது என்பதற்கான பதிலை கொடுத்த நூல் வரலாற்றில் ஜேஸ்டாதேவி மூதேவி வழிபாடு. சில நூல்கள் வாங்கிய அன்றே படிக்க தொடங்குவதும் பல நூல்கள் சில ஆண்டுகள் கழித்து கண்ணுக்கு படுவதும் எப்போதும் நிகழ்வது. சென்ற ஆண்டு தமிழ் விக்கி தூரன் விருது அறிவிக்கப்பட்ட உடன் முதலில் வேதாசலம் அவர்களிடம் வாங்கியது இந்த புத்தகம் தான். விழா நாள் அன்று வாழ்த்துக்கள் வெ.வேதாசலம் என்று கையெழுத்திட்டு கொடுத்த புத்தகம் அலமாரியில் நடுவரிசையில் கம்மென்று அமர்ந்திருந்தது. இப்போது கிராதம் படித்துகொண்டிருப்பதால் இதோடு இணைத்து படிக்கலாம் என்று படித்து முடித்தேன். உலகின் பழங்குடிகள் பலவற்றிலும் உள்ள பொதுப்பண்பான தாய்தெய்வ வழிபாட்டில் அன்னையான மூத்தோள் அமங்கலத்தின் தெய்வமாக மாறிய வரலாற்றை கூறும் நூல் தமிழ் விக்கி விருது பெற்ற தமிழகத்தின் முக்கியமான ஆய்வாளரும் தொல்லியல் அறிஞருமான வேதாசலம், வே.திருநங்கை அவர்களின் வரலாற்றில் மூதேவி வழிபாடு. வேதாசலம் அவரது பாண...