Skip to main content

இந்திய இலக்கிய சிற்பிகள் - ஏ கே செட்டியார்



சாகித்ய அகாதமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் இலக்கிய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியவாதிகளை கொண்டே வெளியிட்டு வருகிறது. அப்பர் , ஞானசம்பந்தர், அழ வள்ளியப்பா, பேரறிஞர் அண்ணாதுரை, ஜெயகாந்தன் என்று பலதரப்பட்ட ஆளுமைகளின் நூல்கள் வெளிவந்துள்ளன.  அந்த வரிசையில் ஏ கே செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதிய நூலை நேற்று முன்தினம் நூலகத்திலிருந்து எடுத்துவந்து நேற்றும் இன்றும் வாசித்து முடித்தேன். அதன் வாசிப்பனுபவ பகிர்வு,  இப்பதிவு.  

ஏ கே செட்டியார் தமிழில் பயணக் கட்டுரைகளின் முன்னோடி, இதழாசிரியர், முதன் முதலாக முழு நீள காந்தியின் ஆவணப் படத்தை தயாரித்தவர் என்ற மூன்று பரிமாணங்களை குறித்த முன்னுரையை சா கந்தசாமி அளிக்கிறார்.

உலகம் சுற்றிய தமிழன் என்று பெயர் பெற்ற செட்டியார், தென்னாபிரிக்கா,இலங்கை, லண்டன், ஜெர்மனி, ரங்கூன்  என்ற எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மலேயா முதல் கனடா வரை என்ற அவரது பயணக் குறிப்பு முக்கியமான பயணக் கட்டுரைகளில் ஒன்று. கப்பல், விமானம், ரயில், டிராம் பேருந்து, கட்டை வண்டி என்று பலவகையான பயணங்களை குறித்தும் அதில் சந்தித்த மனிதர்களையும் ஒவ்வொரு பயணத்தின்போதும் அந்தந்த நிலப் பரப்பின் பண்பாட்டு கலாச்சார வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாவதாக குமரி என்ற இதழை தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். அதில் கட்டுரைகள், புகைப்படங்கள், கவிதைகள் என்று பல படைப்புகளை பிரசூரித்திருக்கிறார். நான் படித்த bishop heber மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர், Cristian Fredrick Schwartz அவர்களுக்கும் தஞ்சை மன்னர் சரபோஜிக்குமான குரு சீடன் உறவென்பது இதுவரை நான் அறிந்திராத செய்தி. அதைக்குறித்தும் செட்டியார் அவர்கள், அவரது கட்டுரைகளில் குறித்து வைத்திருக்கிறார். 

மூன்றாவது காந்தியடிகளின் ஆவணப் படம். காந்தியடிகளின் தீவிர பக்தரான இவரது எந்த ஒரு குறிப்பிலும் காந்தியாரின் வரி இல்லாது இருப் பதில்லை என்கிறார் சா க . 1937 ஆம் ஆண்டு தொடங்கி 1940ம் ஆண்டுவரை இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய காலகட்டத்திலும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தும் அழிவின் விளிம்பில் இருந்த பல்வேறு ஆவணங்களை சேகரித்தும் கிட்டத்தட்ட 50,000 அடிகள் நீளமுள்ள படத்தை தயாரித்து பின் சில காட்சிகளை நீக்கி 12,000 அடி சென்சார் செய்து வெளியிட்டார். 15 ஆகஸ்ட், 1947ம் ஆண்டு விடுதலை தினத்தன்று ராஜேந்திர பிரசாத் (முதல் குடியரசுத் தலைவர்) போன்ற பெருந்தலைவர்களுக்கு இப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளார். பல திரையரங்குகள் படத்தை காட்சிப் படுத்த முன்வராத போதிலும் போர்பந்தரிலிருந்து (காந்தியடிகளின் பிறப்பிடம்) சென்னையில் குடியேறிய சயானி திரை அரங்கின் அதிபர் முன் வரவே பின் பல திரை அரங்குகளில் படம் திரையிடப் பட்டது. David Attenbrough விற்கு கிடைத்தது போன்ற நிதியுதவியும் தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாமல் செட்டியார் சாத்தித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழின் முக்கியமான இலக்கியவாதியான  ஏ கே செட்டியார் அவர்களை குறித்து அறிந்துகொள்ள இந்நூல் ஒரு நுழைவாயிலாக அமைந்தது.

பிகு: நான் படித்தது 2018ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பு ஏராளமான அச்சுப் பிழைகள், துணையெழுத்து பிழைகள் உள்ளன. வாசகர்கள் அதையும் கருத்தில்கொண்டு படிக்கவேண்டும்.



Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...