Skip to main content

நட்சத்திரவாசிகள் வாசிப்பனுபவம்



நட்சத்திரவாசிகள் - 2021ம் ஆண்டிற்கான சாகித்ய யுவ புரஸ்கார் விருதுபெற்ற நாவல், ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியன்.காலச்சுவடு பதிப்பக வெளியீடு,  நூலின் வாசிப்பனுபவம். இத்தலத்தில் நான் பகிரும் அனைத்து நூல் குறித்த பதிவுகளுக்கும் நூலிலிருந்து நான் கண்ட அனுபவப் பகிர்வு மட்டுமே. விமர்சனம் எழுதும் அளவிற்கு என் வாசிப்பு தளம் விரிவடையவில்லை.

2019ம் ஆண்டில் பொறியியல் படித்து முடித்தேன். இதுவரை மூன்று மென்பொருள் நிறுவனங்களில் பணி செய்திருக்கிறேன், செய்துகொண்டிருக்கிறேன். கார்த்திக் எந்த அலுவலகத்திலிருந்து என்னை பின் தொடர்ந்து வருகிறார் என்று எனக்கும் ஐயம் உள்ளது. தோராயமாக நான் கடந்து வந்த எந்த ஒரு நண்பனை குறித்து பதிவெழுதினாலும் அது நித்திலனையோ, சாஜுவையோ, வேணுவையோ, சத்தியையோ, அர்ச்சனாவையோ, பனிமலரையோ அல்லது ராமசுப்புவையோ குறித்த பதிவாகவோ இருக்கக் கூடும், கண்ணடிக்கு அந்த பக்கம் இருக்கும் மனிதர்களின் முகங்கள் சாயம் பூசப்பட்ட கண்ணாடிகளால் தடுத்துவைக்கப் பட்டிருப்பதைப்போல அவரது வாழ்கைகளையும் வெளி உலகத்திலிருந்து மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது. 

இன் நாவல் அந்த அத்தனை மனிதர்களின் வாழ்வின் மீதும் சிறு வெளிச்சத்தை படியச் செய்திருக்கிறது. மேலாளர் படிநிலையில் இருக்கும் வரை சுடிதாரில் சுற்றித்திரியும் யுவதிகள் தலைமை மேலாளர் பதிவுக்கு பதவி உயர்வு பெற்றபின் பருத்தி புடவைகளுக்கு மாறிவிடுவது போன்ற நுண் அவதானிப்புகள் நூல் முழுவதும் நிறைந்திருக்கின்றன. (இப்படி பல யுவதிகளை நானே கண்டதுண்டு அவர்களது privacy கருதி பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை ). 

எனக்கு பிடித்த வரிகளை படிவுசெய்யவேண்டுமாயின் இரண்டு மூன்று பதிவுகள் எழுதவேண்டும். இரவுப் பணி, அதனால் ஏற்படும் உடல் சிக்கல்கள், உளவியல் சிக்கல்கள் குறித்தும் இந்நாவல் தொட்டுச் சென்றிருக்கிறது. ஒருமாத மளிகை சாமானுக்கென்று அம்மாவிடம் கொடுக்கும் பணத்தை விடவும் அதிகமான பணத்தை ஒரு நாள் treat ற்கு செலவழித்தாலும் முகத்தில் சிறு சலனம் கூட இல்லாதிருத்தல், 15 17 ஆண்டுகள் ஒருநிறுவனத்தில் வேலை செய்தாலும் பணி நீக்கம் என்று முடிவானபின் அதிகபட்சம் 2 மாதங்கள் அவகாசம் வழங்கப் படுவதும், ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தாலும் இங்கிருக்கும் அரசியல் பதவி உயர்வில் இருவருக்கும் ஒரே வகையான சலுகைகள் வழங்கப் படுவத்தில்லை போன்ற அத்தை உள் முடிச்சுகளையும் நாவல் தொட்டு செல்கிறது. 

ப சிங்காரம் ஐயா எழுதிய புயலிலே ஒரு தோனி நாவல் கடலோடிகளின் வாழ்க்கையை பேசுவதுபோல், சோ தர்மன் ஐயாவின் நாவல்கள் சூழலியல் மற்றும் விவசாய மக்களின் வாழ்முறையை பேசுவதுபோல் நட்சத்திரவாசிகள் மென்பொருள் துறையை, அதைச்சார்ந்த பிற சந்தைகளையும், உதாரணமாக ஒவ்வொரு சிறப்பு பொருளாதார மையத்திற்கருகிலும் உள்ள தள்ளு வண்டி கடைகள், தேனீரகங்கள், மகிழுந்து மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் குறித்தும் நாவல் பேசுகிறது.

மற்றுமொரு சிறப்பம்சம் apartment, Special Economic Zone(SEZ) போன்ற ஆங்கில சொற்களை முறையே அடுக்ககம், சிறப்பு பொருளாதார மண்டலம் என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். (முன்னரே எவரேனும் செய்திருக்கலாம் நன் இப்புத்தகத்தில் தான் முதன்முறையாக வாசித்தேன்)

மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் குடித்துவிட்டு சமூகத்திலுள்ள அதனை விரோத செயல்களையும் செய்பவர்கள் என்னும் பொதுபுத்தியை இந்நாவல் அசைத்துப் பார்த்திருக்கிறது. என் வாழ்க்கையை நான்தான் எழுதவேண்டும். அதை தன் தோள்களில் ஏற்றி திறம்பட செய்துமுடித்திருக்கும் கார்த்திக் அவர்களை பாதம் பணிந்து வணங்குகிறேன்.

தரமணி படத்தை தவிர இத்துறையை குறித்த கவனிக்கத்தக்க ஆவணங்கள் இல்லை. அந்த வகையில் இந்நாவல் ஒரு முதல் முத்தான முயற்சி. மென்பொருள் துறையை குறித்து ஓரளவிற்கு முன்னோடியாக கருதக் கூடிய நாவல் என்றால் இரா. முருகன் எழுதிய மூன்று விரல்கள். இந்த இரண்டு நாவல்களையும் ஒருவன் ஒன்றன் பின் ஒன்றாக வாசிப்பாராயின் இத்துறையினை குறித்த குறுக்குவெட்டு தோற்றத்தை அறியமுடியும்.

புறநானூறு போன்ற சங்கப்பாடல்கள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன் ஆனால் இந்நூலில் உள்ள அழகியல் அதனையும் சில படிகள் விஞ்சி நிற்கிறது. தினமும் நீ போய் வரும் வாழ்க்கை இத்தனை அழகானது ஒழுங்கா கவனி என்று தலையை கோதியபடி சொல்கிறது. 

பல இலக்கியவாதிகள் ஒரு நாவல் சொல்லும் இடங்களை விட சொல்லாத இடங்கள் மிக முக்கியமானவை என்று கூறக் கேட்டிருக்கிறேன் . பனிமலையின் முகட்டை மட்டும் தான் நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன். நான் பதிவிடாத வாசகனுக்கு என்று அவன்/அவள் கற்பனை செய்து நிரப்பிக்கொள்ளும் வகையான பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றை புதுவில் பிரிப்பது அதன் மீது நிகழ்த்தும் வன்முறை என்றெண்ணி இத்தோடு முடித்துக் கொள்கிறேன். 

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...