Skip to main content

சென்னை புத்தகக் கண்காட்சி

https://www.newindianexpress.com/cities/chennai/2023/jan/05/stalin-to-inaugurate-46th-chennai-book-fair-on-jan-6-2534791.html


46வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது, 400க்கும் மேற்பட்ட அரங்குகள், தினந்தோறும் புத்தக வெளியீடுகள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், நாள்தோறும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் கலை நிகழ்ச்சிகள் என ஒட்டுமொத்த தமிழகத்தின் மாபெரும் அறிவுத் திருவிழா. அதை குறித்த சில கருத்துக்கள். 

கொண்டாட்டம்: 

இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அரிதாகவே புத்தக திருவிழா ஒருங்கிணைக்கப் படும். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கால் விழா தாமதமாக தொடங்கியது. இவ்வாண்டு வழக்கம் போல் ஜனவரி மாதம் தொடங்கியிருக்கிறது. இன்னொரு சிறப்பாக 16-18 ஆகிய தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புத்தக அரங்குகளுக்குள் நுழைவதென்பது, தேசத்தின் மூளைக்குள் நடை செல்வது போன்ற அனுபவம். தற்கால சிந்தனை, வாசிப்பு, புதிய நண்பர்களின் சந்திப்பு, நல்ல அப்பளம், சுவையான பில்டர் காப்பி, சென்னையை சுற்றிப்பார்பது போன்ற எண்ணற்ற நன்மைகள் இதில் பங்கேற்பதால் கிடைக்கும். 

ஐயங்கள்: 

இதுவரை ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை, பொன்னியின் செல்வன் மட்டும் தான் வாசிக்கப் போகிறேன் என்று கிளம்பும் சிலரை சமூக வலைத்தளம் எள்ளி நகையாடும் அவலங்கள் ஆங்காங்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அறிவுச் சூழலுக்கு யாரும் வாயிற் காப்பாளனாக இருக்கவேண்டியதில்லை. பொன்னியின் செல்வனுக்கும் இங்கு இடமுண்டு. பொ.செ வாங்க வரும் வாசகர் அதே அரங்கில் (பொ.செ நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகம் ஆதலால் எவரும் பதிப்பித்து வெளியிடலாம், அநேக அரங்குகளில் கிடைக்கும்) ருஷ்ய இலக்கியத்தையும், டிக்கன்ஸையும், காந்தியையும் கண்டடையட்டுமே ? 

கற்றலின் இன்பம் ஒன்று தான் இவ்வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் விட மகோன்னதமானது. 

முயற்சி:

புத்தக வாசிப்பனுபவத்தை இளம் வயதில் பழக்குவது எளிது. ஏழாம் வகுப்பில் நூலகத்திலிருந்து இரவலாக பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு என்னும் 50 பக்க புத்தகம் தான் என்னுள் வாசிப்பு அனுபவத்தை விதைத்தது. குழந்தைளுக்கும் இதை கற்றுத்தர வேண்டும்,நம் குழந்தைகளுக்கு இப்போதே டால்ஸ்டாயின் அன்னா கரனினாவை கொடுத்து குறிப்பெழுத சொல்லவேண்டும் என்பது என் கருத்தல்ல. Harry potter ல் தொடங்கட்டும், ஆனால் வாசிப்பு முக்கியம். தற்கால அமெரிக்க ஐரோப்பிய குழந்தைகளுக்கு இருக்கும் வாசிப்பில் ஐம்பதில் ஒரு பங்கு கூட நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. அவர்களின் வாசிப்பென்பது அடுத்த நூறாண்டுகளுக்கு உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு. Original thinking வெறும் வாசிப்பின் மூலமே திகழ்வது.

மின்னூல் பொதுமல்லவா ?

இத்தகைய திருவிழாக்கள் வெறும் கண்காட்சி அல்ல, கொண்டாட்டம். இளங்கோவிலிருந்து, கம்பனிலிருந்து திருச்செந்தாழை வரை என் பண்பாட்டை பொன்னேட்டில் பதிந்து வைத்த பெருமக்களுக்கு சிறப்பு செய்தல், அவர்களின் படைப்புகள் குறித்து விவாதித்தல். பொதுப்புத்தி என்பது இணையத்தில் வைப்பதல்ல நேரடியாக கண் முன் விரிவது. அதை காண இத்திருவிழாவிற்கு செல்லவேண்டும்.

அறிவுத்திருட்டு 

சென்ற ஆண்டு நன் கண்ட ஒரு நிகழ்வு. YMCA மைதானத்திற்கு நுழையும் பிரதான வாயிலில் தெருவோர பழைய புத்தகக் கடைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் Think and Grow rich, Atomic Habits, psychology of money போன்ற பல தன் முன்னேற்ற புத்தகங்கள் மற்றும் பல தமிழ் புத்தகங்கள், சட்டத்திற்கு பொரும்பாக, சாணிக்காயிதத்தில் அச்சிட்டு குறைந்த விலைக்கு விற்கப் படுகின்றன. அவற்றை எக்காரணம் கொண்டும் வாங்கிவிடாதபடி கேட்டுக் கொள்கிறேன். 

புத்தக பரிந்துரை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சார்ந்தது. நான் பரிந்துரைக்க விரும்பும் சில புத்தகங்கள் 

  1. வேள்பாரி - சு வெங்கடேசன்(மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்), விகடன் பிரசுரம். 
  2. அறம் - ஜெயமோகன், வம்சி புக்ஸ்.
  3. குமரித்துறைவி - ஜெயமோகன், விஷ்ணுபுரம் பதிப்பகம்.
  4. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, வம்சி புக்ஸ், தமிழில் K V  ஷைலஜா 
  5. மறைக்கப் பட்ட இந்தியா - S, ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம்
  6. நாளைய காந்தி - சுனீல் கிருஷ்ணன்.
  7. ஒரு சிறு இசை - வண்ணதாசன், சந்தியா பதிப்பகம் 
  8. சுஜாதா சிறுகதைகள்
  9. அன்டன் செகோவ் சிறுகதைகள்
  10. ஜீவன் லீலா, சாகித்ய அகாடெமி 
  11. பழுப்பு நிற பக்கங்கள் - சாரு நிவேதிதா 
  12. How asia works - Joe Studwell 
  13. Pax Indica - Shashi tharoor
  14. பெண் ஏன் அடிமையானாள் - இ வெ ரா பெரியார்
  15. மாபெரும் தமிழ் கனவு - பேரறிஞர் அண்ணா
புத்தக திருவிழாவை குறித்த விரிவான கட்டுரை ஒன்றை ஜெயமோகன் அவர்களும் இன்று பதிவிட்டுள்ளார். https://www.jeyamohan.in/178126/

கண்காட்சியில் சந்திப்போம் !!!

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...