Skip to main content

பொன்னி

 

நடந்தாய் வாழி காவேரி பயணக்கட்டுரை நூல் வாசிப்பனுபவம். 

நடந்தாய் வாழி காவேரி சிட்டி, தி ஜானகிராமன் இனைந்து எழுதிய பயணக்கட்டுரை. தமிழ் பயணக்கட்டுரை வரலாற்றில் ஏ கே செட்டியார் அவர்களின் பயணக்குறிப்புகளை போன்று குறிப்பிடத்தக்க ஒரு நூல். தி ஜா நாவல் உலகத்தில் ஒரு ஆசான், சு வேணுகோபால் போன்ற சமகால பல எழுத்தாளர்களுக்கு குருவாக விளங்குபவர். சிட்டி என்கிற பெ கோ சுந்தரராஜன் மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்தவர்.

சிட்டி, தி ஜா மட்டுமல்லாமல் உடன் ஒரு புகைப்பட கலைஞர், ஓவியர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் என்று ஒரு குழுவுடன் செல்லும் பயணம் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.

   1. தலைக்காவேரி - ஹொகேனக்கல்

பயனைக் கொண்டுதான் பெரியவர்கள் தொடங்கும் பணியின் நோக்கங்களையும் நுட்பங்களையும் அறிய முடியும் என்று காளிதாசன் அருளிய வாக்குக்கு ஒரு சான்று வேண்டுமானால் தலை காவேரியின் இந்த மௌனச் சுனையைதான் காணவேண்டும். 

தலைக்காவேரி தொடங்கி கிருஷ்ணராஜசாகர், ஸ்ரீரங்கப்பட்டணம், மேகதாட்  வழியாக ஹொகேனக்கல் வரை சென்றடைந்துள்ளனர். வழியில் ஒரு முதியவரை சந்திக்கும் குழுவை குறித்து நவீன வசதிகளான மின்விசிறி ட்ரான்ஸிஸ்டர் போன்றவற்றை வைத்திருந்தார் என்று குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீரங்கபட்டணத்தில் அவர்கள் தங்கியிருந்தபொழுது காலரா நோய் பரவி மக்கள் அவதியுற்றிருந்ததையும், நதியில் குடிநீர் எடுக்கச் சென்ற குழுவினர் தடுப்பூசி அலுவலருக்காக பயந்து உடனடியாக வண்டியை கிளப்பி சென்றதையும்  நகைச்சுவையாக குறிப்பிடுகின்றார்.

12ம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட ரங்கநாதர் ஆலயம், அதன் பாண்டியர் கால கட்டிட கலையையும் வியந்து பதிவுசெய்துள்ளார். மெக்கராவில் கண்ட தமிழ் பெண் ஒருவர் அவர்களை சென்று வாருங்கள் அண்ணா என்று விளித்ததை தவறாமல் குறிப்பிட்டுள்ளனர்.

தலைகாவேரியிலுள்ள பெரியதும் சிறியதுமான இரண்டு குண்டங்கள், பெரிய குண்டத்தில் மக்கள் விட்டுச் சென்ற பொன்னாபரணங்கள். காவேரி, காவேரியப்பா போன்ற பெயர்கள் குடகுப்பெயர்கள், குடகில் நடைபெற்ற திருமண காட்சிகள்,  பென்னாகரம் வாரச்சந்தை, அங்கு வாங்கிய பொருட்களின் வரிசைக்கிரமம் என்று ஹொகேனக்கல் வரையிலான மொத்த குறிப்பையும் பதிவுசெய்துள்ளார்.

பின் சென்னை சென்றுவிட்டு சிறிது நாட்களுக்கு பின் பூம்புகாரிலிருந்து தொடங்குகின்றனர்.

     2.  பூம்புகார், காவிரியின் தென்கரை வழியாக ஹொகேனக்கல்

காவிரிப்பூம்பட்டினத்தை குறித்து இவ்வாறு விவரிக்கிறார் 

"இளங்கோவடிகள் ஊரும் இல்லை; காட்சியும் இல்லை இப்பொழுது. மருவூர்ப் பாக்கம் இல்லை; பட்டினப்பாக்கம் இல்லை. இரண்டுக்கும் நடுவேயிருந்த பெருவழியோ, அதன் இரு மருங்கிலும் நின்ற மரங்களோ மரங்களின் கீழுள்ள அங்காடிகளோ இல்லை. பல தேசத்து மாந்தரும், பல ஊர் மக்களும் பேசியும் கூவியும் சேடகும் கலந்த அரவம் இல்லை. கோழியை விரட்டக் காதணியைப் பிடுங்கி எறிந்த பெண் அமர்ந்த உலர் முற்றம் இல்லை. பல நாட்டுக் கப்பல்கள் இல்லை. யவனர் இல்லை. வேறொரு அந்நியரும் இல்லை. கடற்கரையில் இளங்கோ கண்ட நீண்ட வரிசையான அங்காடிகள் இல்லை. கடல்தான் வீசி வீசி அலையெறிந்து எங்களை வரவேற்றது. வேலிகளையும் வீடுகளையும் கடந்து, கடலுக்கு முன்னுள்ள மணல் வெளியில் நடந்து மீனவர் குப்பத்திற்கு அருகே போனோம். நாங்கள் போனசமயம் அங்கும் கூட்டம் இல்லை. கட்டுமரங்கள் திரும்ப வில்லையோ என்னவோ. எனவே சற்றுத் தெற்கேயிருந்த கண்ணகி சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றோம்."

அத்தனை காட்சிகளும் ஒரு நொடியில் கண் முன் தோன்றி மறைந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள காலசரடை இழுத்து இந்நாளில் முடிகிறார் தி ஜா, சிட்டி.

கண்ணகி, கோவலன் சென்ற வழியை பின்தொடர்ந்து செல்வதாக முடிவுசெய்து செல்கின்றனர். வழிநெடுக பாட்டும் இசையும் சிலப்பதிகார விவாதங்களுமாக கொண்டாட்டத்துடன் செல்கின்றனர். மாயவரம் தஞ்சை என்று அகண்ட காவிரி நகரான திருச்சியை அடைகின்றனர். திருவானைக்கா மற்றும் திருவரங்கம் ஆலயத்தை குறித்தும் இவ்விரு ஆலயங்களும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய போர் காலத்தில் எவ்வாறு பாசறையாக விளங்கியதென்பதையும் உறையூரில் நடைபெற்ற அகழாய்வுகளையும் குறித்துள்ளனர். 

திருப்பராய்த்துறை உறைவிட பள்ளி அங்கு இன்றும், (இன்றும்) நடைபெறும் குருகுலக் கல்வி, மாணவர்களின் வாழ்க்கை முறை ஆகியவையும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

தி ஜா  தஞ்சாவூர் காரர். தஞ்சையை குறித்த பதிவுகளில் அவர் கொண்ட இசை ஆர்வமும் தன இளமைக்கால நினைவுகளையும் சில பக்கங்களில் அசை போட்டிருக்கிறார். 

   3. ஹொகேனக்கல், காவிரியின் வடகரை வழியாக பூம்புகார் 

ஈரோடு கொடுமுடி பவனி வழியாக மீண்டும் காவிரிப்பூம்பட்டிணம் சென்றடைகின்றனர். stanely நீர்த்தேக்கம் அங்குள்ள மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றையும் குறித்துள்ளனர். 

முடிவு

பொன்னி, என் வியர்வை, விழிநீர், நிணம், குருதி என்று எல்லாமுமாக இருப்பவள். எம்மில் பலருக்கு அவள் அன்னை, பலருக்கு மகள், பலருக்கு கடிந்து கொள்ளும் தோழி, சிலருக்கு இடித்துரைக்கும் தமக்கை. பொன்னியின் பயணமென்பது அதன் இக்கரையில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் பயணம். கரிகால் வளவன் காலம் முதல் இந்நொடி வரை வரலாற்றை மௌனமாக கேட்டுடிக்கொண்டிருக்கும் காலதின் சாட்சியம். இன்னும் இன்னும் என வளர்ந்து செழித்து ஓடிக்கொண்டே இருப்பவள்.

இது பயணக் கட்டுரையாதலால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி கவரக் கூடும் இந்நூல் காட்டும் காவேரி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்(1971 ல் புத்தகத்தின் முதல் பாதிப்பு வந்துள்ளது ) அவர்கள் கண்ட காவேரி. இன்று மேகதாட்டுவிலிருந்து பூம்புகார் வரை பயணம் செய்தால் முற்றிலும் வேறு வகையான சித்திரம் கிடைக்கும். Tip of an iceberg ஐ மட்டும் தான் நான் இங்கு குறித்துள்ளேன்.


- மனோ 

திருச்சி (காவிரிக்கரை, 28 ஜனவரி 2023)

Comments

Popular posts from this blog

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...