Skip to main content

இடக்கை வாசிப்பனுபவம்


இடக்கை, S ரா. நூலின் வாசிப்பனுபவம். உலகம் முழுக்க நீதிக்காக காத்திருக்கும் அபலை மக்களின் கதையை தூமகேது வழியாக கடத்தியிருக்கிறார் S.ரா. இடக்கை, ஒரு magical realistic நாவல். மண்ணாலான பெண், அவளை தினந்தோறும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் கணவன், கிணற்றில் வாழும் மனிதன், மன்னனின் சபையில் முறையிட்டும் நீதி கிடைக்காததால் விண்ணுலகம் சென்று கடவுளிடம் முறையிடும் புழு, குரங்குடன் சதுரங்கம் ஆடும் பிஷாடன் என்று பறக்கும் கம்பள கற்பனைகள் நூல் முழுக்க நிரம்பியிருக்கிறது. 

கண்ணாடி பிரமிட்டை போன்று இடக்கை நாவலுக்கு பல கோணங்கள் உள்ளன. 

1. பாதுஷாவின் பாரம் 

பதவிக்காக நடைபெறும் கொலைகள் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது. (நிகழ்காலத்து கொலைகள் உங்கள் சிந்தைக்கு வந்தால் நானோ வரலாறோ பொறுப்பல்ல !) தன் அந்திம காலத்தில் மாமன்னன் ஒளரங்கஷீப்பும் இதே கவலையில் ஆழ்ந்திருக்கிறார். தந்தையை கொன்றுவிட்டு அரியணை ஏறிய தனக்கும் அதே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற கேள்வி பாதுஷாவை துளைக்கிறது.

"மாபெரும் இந்துஸ்தானத்தை ஆட்சி செய்யும் பாதுஷாவாக இருந்தாலும் உறக்கத்தின் முன் மண்டியிடத்தானே வேண்டியிருக்கிறது."

சுஃபி ஞானியின்கணிப்பின் பேரில் தனக்கு இயற்கை மரணம் தான் என்று தெளிந்தவுடன் மாபெரும் பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்கிறார். இயற்கை முறையில் அவர் மரணமும் அரங்கேறுகிறது. 

"ஒருவனை அல்லா மிக மோசமாக தண்டிக்க விரும்பினால் அவனை தேசத்தின் பாதுஷாவாக அமர்த்தி வேடிக்கை பார்ப்பார்"

இந்த இடத்தில் என் அனுபவ இடைச்செருகல் பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன். 2011ம் ஆண்டு தேர்தலுக்காக சுற்றுப் பயணித்தின் போது செல்வி ஜெயலலிதா அவர்கள் (அவர் போட்டியிட்ட)திருவரங்கம் தொகுதிக்கு பரப்புரைக்கு வந்திருந்தார், விமான நிலையம் தொடங்கி அனைத்து தெருக்களும் முடித்து மீண்டும் விமான நிலையம் சென்றடையும் வரைக்கான பாதை முழுவதும் துரிதமாக செப்பனிடப்பட்டு வேகத்தடைகள் அனைத்தும் நீக்கப் பட்டன, அப்போது ஒரு காவலர் சிறுவனான என்னிடம் சொன்னது "ஒரு வேகத்தடைக்கு ஆறு வினாடி நேரம் வேகத்தை குறைத்து வாகனம் நின்றால் குறிவைத்து துப்பாக்கி குண்டு பாயும் ஆபத்து உள்ளது" என்று. இத்தனை கான்வாய்கள், துப்பாக்கி ஏந்திய கரங்கள் இருந்தும் அரசனின்/அரசியின் உயிர் என்பது ஜ்வாலையின் மீது நின்று தவம் புரிவைதை போன்றது.  39 வயது முதல் அரியணையை அலங்கரிக்கும் ஒளரங்கசீப் தன் 89வது வயதில் இயற்கை எய்துகிறார் அதன் பின் நடக்கும் அவலங்களே நாவலின் மையக் கரு.

2. நீதிக்கான காத்திருப்பு 

இன்றும் நம் தேசத்தின் நீதிக் கதவுகள் திறப்பதற்காக கோடிக்கணக்கான கண்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றன. எங்கோ யாரோ ஒருவர் தப்பிப்பதற்காக வளைந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறது நீதிச் சரடு. (மீண்டும் உங்கள் நினைவிற்கு வரும் சமகால நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பல்ல). நாவலில் ஒரு வரி வருகிறது. 

"அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி."

ஆட்டுத் தோல் பதப்படுத்தும் தூமகேதுவை மன்னனின் ஆட்கள் கைது செய்து காலாவில்(திறந்தவெளி சிறை) அடைத்து விடுகின்றனர். ஒரு குற்றமும் செய்யாத தான் என் இந்த இருளில் சிக்கிக் கொண்டோம், என்றேனும் ஒரு விடிவெள்ளி தனக்கு ஒளியை கட்டிவிடாதா என்று ஏராளமான கைதிகள் காலாவில் அடைந்து உசாவியிருக்கின்றனர். அங்கிருக்கும் கைதிகள், அவர்கள் கைது செய்யப்பட்ட கதைகள், அவர்கள் அனுபவங்கள், சுக துக்கங்கள், இன்னும் இன்னும் என்று பல உள் மடிப்புகளை, காலாவின் பக்கங்கள் கொண்டிருக்கின்றன.

3. மூடத் தலையை அலங்கரிக்கும் மகுடம்

Dictator என்ற படத்தில் வரும் முட்டாள் கொடுங்கோல் அரசனிற்கு எதிர் தட்டில் வைக்க தகுந்த ஒரு அரசன் பிஷாடன். புதிய பாதுஷாவின் பட்டாபிஷேகத்திற்கு தனக்கு வந்த அழைப்பை ஏற்று மொத்த நாட்டையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறான் பிஷாடன். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அத்தனை ஆண்களும் டெல்லி சென்றிருக்கவேண்டும் என்று கட்டளை பறக்கிறது. ஊரிலுள்ள அத்தனை ஆண்களும் எவ்வித சலுகையும் இன்றி டெல்லிக்கு பயணத்தை துவங்குகின்றனர்.  பணமதிப்பிழப்பு போன்ற எண்ணற்ற அறிவிப்புகள் என் சிந்தனை சுவரை தொட்டுச் சென்றன. டெல்லிக்கு போகும் வழியில் பிஷாடன் மரித்து விடவே ஊர், ஊர் திரும்புகிறது !

4. அறமற்ற வணிகம் 

போர்த்துகீசிய வணிகன் ரெமியஸ் தான் சுய லாபத்திற்காக பிஷாடனை தான் ஆசைப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறான். மன்னனும் தன் கருவூலம் நிரம்புகிறதென்று ரெமியஸ் எழுதித்தரும் அனைத்தும் அரசாணையாக வெளியிடுகிறான்.

நாவல் முழுக்க தொடர்ந்து வரும் மற்றொரு குறியீடு அவுரங்கசீப் தன கையால் செய்த குல்லா ஒன்று, ஒருமுறை வழிபாட்டின்போது தன்னை சகோதரா என்று வாஞ்சையுடன் விளித்த ஒருவனுக்காக அவரே நெய்தது. அவரது கடைசி இரவை  உணர்ந்துகொண்ட அவர் அந்த குல்லாவை அஜ்யாவிடம் அந்த மனிதனிடம் சேர்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறார். அஜ்யாவும் மரணிக்கவே நாவலின் இறுதி வரியில் அந்த குல்லா ஒரு பிச்சைக்காரன் கையிலிருந்து தூமகேதுவின் தலைக்கு வந்தமர்கிறது.

இன்னும் நான் விளங்கிக் கொள்ளாத பல படிமங்கள் தூமகேது காலாவிலிருந்து தப்பித்த பின்னான பயணத்தில் விரிந்துள்ளன. மீள் வாசிப்பில் அவற்றை நான் கண்டடையக் கூடும். இடக்கை S ரா வின் மகத்தானதொரு படைப்பு. அனைவருக்கும் நிச்சயம் பரிந்துரைப்பேன். பவா செல்லதுரை அவர்களின் பெருங்கதையாடல் நிகழ்விலும் இடக்கையை சொல்லியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...