Skip to main content

இன்றைய காந்தி

இன்றைய காந்தி

இன்றைய தினம் அக்டோபர் 2, காந்தியாரின் பிறந்த தினம்.

Courtesy: Wikipedia

  

 மகாத்மா காந்தி, தேசப்பிதா. தன்னைப்போல ஆயிரம் காந்திகளை உருவாக்கிய பிரஜாபதி. சுதந்திர போருக்கு அகிம்சை ஆயுதம் ஏந்தியவர். ஒருபோதும் வன்முறைக்கு என் 30 கோடி மக்களை இட்டுச்செல்லாதவர். சுதந்திர வேள்வியில் சிந்தவிருந்த பல்லாயிரக்கணக்கான குருதி துளிகளை தடுத்தவர். நேற்று இன்று நாளை என்று என்றென்றைக்குமான சிந்தனைகளை விட்டு சென்றவர்.இன்றைய தினம் அவர் சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரம் காட்டி காந்தி சாமி என்று தொன்மமாக ஆக்குவது ஒருவகை விளக்கத்தையே அளிக்கும். நேற்று நேருவிற்கு காந்தி முக்கியமாக இருந்தார். இன்று எனக்கும் முக்கியமாக இருக்கிறார். நாளை வரப்போகும் ஒருவனுக்கும் காந்தி முக்கியம்.  

21ம் நூற்றாண்டிற்கு காந்தி விழுமியங்கள் என்று சிலவற்றை சிந்தித்து பார்க்கிறேன்.

Us vs them ! 

இருபதாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் உருவாக்கிய நாம், அவர்கள் (Us Vs Them ) என்ற கட்டமைப்பை தகர்த்தெறிந்தவர் காந்தி. என் பிடரியில் பூட்ஸ் கால்களை வைத்து முன்னூறு ஆண்டுகாலம் அமிழ்த்திக்கொண்டிருந்த அந்த பிரித்தானியனுக்காகவும் சேர்த்து சிந்தித்தவர் காந்தி. ஒவ்வொரு மேம்பாலங்கள் இந்நகரில் எழுப்படும்போதும், புஷ்பரக விமானமாக மெட்ரோ ரயில்கள் பறந்து செல்லும்போதும். அதற்கு பலி கொடுக்கப்பட்ட தொழிலார்களின் ஆன்மாவை நினைத்து பார்க்கிறேன். அதி மூர்க்கமான தற்பெருமை கொண்ட மொழி சண்டைகள், சாதி சண்டைகளில் ஒருபோதும் என் மனம் குவியாதிருக்க செய்தவர் காந்தி. இது அனைத்திற்கும் ஊற்றுக்கண் என் மொழி பெரிது என் இனம் பெரிது, உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்தது என் இனம் என்ற வெற்று பெருமிதங்கள். இந்த பெருமிதங்களின் இன்னொரு முகம். பிறன் என்ற கட்டமைப்பை உருவாக்கி அவர்களை தாழ்த்துவது, தூற்றுவது.

பொறுப்பான நுகர்வு 

ஒருபோதும் சலுகை இருப்பதற்காக எந்த ஒரு பண்டத்தையும் நுகர்வது தவறு என்று. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கனக்கான லாரிகளில் குப்பைகள் பெங்களூரு நகரின் புறநகரில் கொண்டு குவிக்கப்படுகிறது. இன்னும் நூறாண்டுகளில் மொத்த நகரமும் வாழ்வதற்கு இடமிலாது வெறும் குப்பை மேடாகக்கூடும். அனைத்து பெரு நகரங்களிலும் இதே நிலைதான். ஒவ்வொரு பண்டத்திலும் உணவு, உடை, போக்குவரத்து, கேளிக்கை, திரைப்படங்கள் வரைக்கும் நுகர்வு புரையோடியிருக்கிறது. மானுடம் தான் செய்வது Over consumption என்ற பிரக்ஞையை இழந்து நெடுநாட்கள் ஆகிறது.

உண்மையின் பல முகங்கள் 

உண்மை என்பது எப்போதும் ஒரு முகம் கொண்டதல்ல. நான் ஒரு உண்மையை கண்டடைந்திருக்கிறேன். அதே போல் நீ கண்டடைந்த உண்மையும் அதே அளவு முக்கியமானதே என்பது காந்தியத்தின் மிக முக்கிய விழுமியம். என் உண்மை பெரிது என்று ஒருபோதும் மார் தட்டிக்கொள்ள மாட்டேன்.

மையத்திற்கு எதிரான சிந்தனை 

அன்றாடம் அலுவலகத்தில் பார்க்கும் ஒரு நிகழ்வு. எந்த தலைமை நல்லதொரு படிநிலையை கொண்டுள்ளதோ அங்கு முடிவுகள் விரைவாக எட்டப்படும் என்பது. 100 பேரை தலைமை தாங்கும் ஒருவர் அவருக்கு கீழ் சிறு குழுக்கள் அமைத்து அதற்கு தலைவர்களை நியமிக்கும்படி தான் அமைப்பு இருக்கிறது. ஆனால், முடிவுகள் அவ்வாறு எட்டப்படுவதில்லை. அனைத்திற்கும் நூற்றுவர் தலைவரின் ஒப்புதலுக்காய் காத்திருப்பது இந்த அமைப்பை குலைக்கும் செயல். இதே கட்டமைப்பு ஆட்சி அதிகாரம் அரசு என்று எங்கும் பொருந்தும்.


சிறு வயதில் இருந்து காந்தியின் மீது கொண்ட பொய்யான சித்திரத்தை மாற்ற எனக்கு உதவிய புத்தகங்கள்.
1. உரையாடும் காந்தி - ஜெயமோகன். காந்தி குறித்தது  வாசகர் கடிதங்களின் பதில்கள், கட்டுரைகளின் தொகுப்பு 
2. காந்தியின் நிழலில் - S ராமகிருஷ்ணன். 
3. நாளைய காந்தி - சுனில் கிருஷ்ணன்






Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...