Skip to main content

ஜார் ஒழிக - சாம்ராஜ், வாசிப்பனுபவம்

    ஜார் ஒழிக, கவிஞர் சாம்ராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. நீண்ட விடுமுறை தினங்களான இந்த நாட்களில் ஆண்டு தொடக்கத்தில் படிப்பதற்காக எடுத்து வைத்து முடிக்காமல் விட்ட புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். மாலை தொடங்கி ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் ஜார் ஒழிக.





    முதன் முதலாக இரண்டாம் நிலை ஆலயக்கலை வகுப்பில் பங்கேற்று கவிஞரை சந்தித்து வீடு திரும்பிய ரயில் பயணத்தில் ஜார் ஒழிக என்ற ஒரு கதையை மட்டும் படித்துவிட்டு அப்படியே வைத்திருந்தேன். 

    சுஜாதாவை தன் ஆதர்சங்களில் ஒருவராக சாம்ராஜ் குறிப்பிட்டுள்ளார், எந்த ஒரு கதையும் சுவாரஸ்ய தன்மை குன்றாமல் வரிகளுக்கிடையில் பகடியை விட்டு செல்கின்றன. வாசகனாகிய எனக்கு இட்டு நிரப்ப சில இடைவெளிகளை தந்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வருபவர்கள் நாம் அன்றாடம் காணும் மனிதர்கள் - குள்ளன் பினுவையோ, பரமேஸ்வரியையோ காலை பேருந்து நிறுத்தத்தில் நாம் பார்த்திருக்கக்கூடும்.

    மரியபுஷ்பம் இல்லம் கதை மற்ற அனைத்து கதைகளை விடவும் மனதிற்கு நெருக்கமான ஒன்று, என் நிலத்தில் நடக்கும் கதை, மாம்பழ சாலை பேருந்து நிறுத்தமும் செந்தண்ணீர்ப்புரமும் நாம் புழங்கும் இடங்கள். ஸ்ரீரங்கத்து தேவதைகளுக்கு பிறகு எங்கள் ஒரு ஓர் இலக்கிய பிரதியில் இடம் பெற்றுள்ளது. சில நாட்கள் திருவரங்கத்திற்கருகில் தங்கியிருந்த நினைவுகளுக்கு இக்கதை அளித்திருக்கிறார்.

    செவ்வாக்கியம் கதையில் கம்பை எடுத்துக்கொண்டு போகும் செவ்வாக்கியத்தை கண்ட பின் வந்தமர்ந்த மௌனத்தை கலைக்க நெடு நேரம் பிடித்தது. 

    போட் ஜெட்டியிலிருந்து, மதுரை வீதிகளிலிருந்து, அழகர் மலை அடிவாரத்த்திலிருந்து நில காட்சிகளை சிறப்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

    "அபார்ட்மெண்ட் வாசல்களில் செக்யுரிட்டிகளின் செல்போன்களில் ஒரிய பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன". "அம்மா கவனமாய் அரிசியை பானையில் கொட்டிவைத்துவிட்டு, மண்ணென்னையை அடுப்பின்கீழ் வைத்த பின்னே ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் " போன்ற நுண் சித்தரிப்புகள் கட்சிதமாக பொருந்தியுள்ளன. 

    தொழில் புரட்சி கதையில் வரும் ஜீப், ஜார் ஒழிக கதையில் வரும் அரசமரத்தடி கணபதி அனைவருக்கும் கதையில் ஒரு பங்குண்டு.

    செவ்வாக்கியம் ஆகட்டும், சன்னதம் கதையில் வரும் லட்சுமியக்காவாகட்டும் ஒரு வகையில் விசித்திரமானவர்களாக அல்லது தனித்துவமானவர்களாக அமைந்துள்ளனர், ஒரு மர்மம் கதை முழுதும் நீடிக்கிறது. அதிலும் லட்சுமியாக்க இன்னும் கூடுதலாக ஒரு Alpha female. "இவர்கள் வசவுகளும் சாடை பேச்சுக்களும் அவள் கெண்டைக்கால் முடியை கூட தொட முடிந்ததில்லை" என்ற வரி அவளை நிறுவுகிறது. 

    என்றுதானே சொன்னார்கள் தொகுப்பின் சில கவிதைகளை வாசித்திருக்கிறேன், அடுத்து பட்டாளத்து வீடு தொடங்கியிருக்கிறேன். சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கிய கவிஞருக்கு அன்பும் நன்றியும். 

 

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...