Skip to main content

ஆகாயத்தாமரை - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை நாவல் வாசிப்பனுபவம்.



 2 3 வாரங்களாக மிக மெல்ல, அல்லது நகராது இருந்த வாசிப்பை மீட்டெடுக்க சரளமான easy read ஏதேனும் தேடிக்கொண்டிருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய ஆகாயத்தாமரை நாவல் கண்ணில் பட்டது. 

வாழ்விலே ஒருமுறை தொகுப்பு, தண்ணீர் நாவல், மற்றும் சில அசோகமித்திரனின் படைப்புக்களை வாசித்திருக்கிறேன். எளிமையான அதே நேரம் திடமான, முடித்து விட்டு நாம் தனியாக அமர்ந்து சிந்திக்க பல துளிகளை வழங்கும் எழுத்து அசோகமித்திரனுடையது. 

பகடியும் அங்கதமும் இரு இறகுகளாக கொண்டு பறப்பவர். ஒரு சிறுகதையில் நெற்றி நிறைய திருநீறுடன் நடந்து வந்தார். எங்கே குப்புற விழுந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது என்கிறார். அந்த ஒரு வரியை கொண்டே நாளை கடத்திவிடமுடியும். அன்றைக்கான எல்லா சத்துக்களும் அந்த ஒரு வரியில் உள்ளன.

நான் இலக்கிய வாசிப்பை இரண்டு வகையாக பிரித்துக்கொள்வேன் எனக்கு புரிதலுக்காக. முதல் வகை கற்பனையில் எட்ட முடியாத தூரத்திற்கு கதையையும் மாந்தர்களை சிருஷ்டித்து கதை சொல்வது. வெண்முரசு கொற்றவை போன்ற பெருங்காவியங்கள் உதாரணம். முழுவதுமாக நம்மை ஒப்புக்கொடுப்பவை. இரண்டாம் வகை அதிகமும் நமக்கு அணுக்கமான நிகழ்வுகள், இடங்கள், மனிதர்களை கொண்டு கதை சொல்வது. சற்று பொறுத்தால் கதை மாந்தர்களை சந்தித்து கை குலுக்க முடியும்.

அசோகமித்திரன் படைப்புலகம் என் வசிப்பிற்கெட்டியவரையில் இரண்டாம் வகை. அவர் காண்பித்த சென்னை இன்றும் காண கிடைக்கிறது. புலி கலைஞன் இன்றும் ஏதோ ஒரு சினிமா அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு வந்துகொண்டு தான் இருப்பான்.  

ஆகாயத்தாமரை என்ற தாவரம் தான் படிமம். வேலை பார்க்கும் இடத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு ஓவிய கண்காட்சியில் உதவியாளராக பங்கேற்று அதற்கென்று ஒரு ஊதியம் பெற்று கொள்கிறான் ரகு. அதன் பொருட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறான். மீண்டும் பணியில் சேர்வதற்குள் அவனை சுற்றியும் அவனுக்குள்ளும் நடக்கும் நிகழ்வுகள், அலைக்கழிப்புகள், கொந்தளிப்புகள் தான் நாவல்.

ரகுவுக்கும் அவன் அன்னைக்கும் நடக்கும் உரையாடல்கள் பல முறை நாம் நமது அன்னையுடன் நடத்தியதாக இருக்கும். பாலகிருஷ்ணனை போன்று அசரீரியான மனிதர்கள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருப்பர். 

ராஜப்பா ரகு மற்றும் மாலதியை சந்திக்கும் அந்த சிறு பொழுது மட்டுமே சுதந்திரமாக இருக்க முடிகிறது. அந்த சுதந்திரமான விசிராந்தையான வாழ்வு ரகுவிற்கு மீண்டும் பணியில் சேர்ந்த பின் அமைகிறது. அசோகமித்திரன் காட்டும் மனிதர்கள் அனைவரும் நாம் எங்கோ சந்தித்த முகங்களாக இருக்கின்றனர். நேற்று கூட ராஜாப்பாவை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். ஆனால் பார்க்க தவற விட்ட அவரது பக்கங்களை அறிமுகம் செய்வதாக கதையோட்டம் இருக்கும்.

ஒரு மேகம் கடந்து போவது போன்றதொரு வாசிப்பு ஆகாயத்தாமரை. தண்ணீர், கரைந்த நிழல்கள் அளவிற்கு கவனம் பெறாத ஆகாயத்தாமரை நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல்.



Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...