Skip to main content

அனாகதநாதம் - மதிப்புரை

         அனாகத நாதம் செந்தில் ஜெகந்நாதனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.

    



         அனாகத நாதம் கதையில் சாமிநாதன் பேருந்தில் எறியபோதே இவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சிந்தித்து கொண்டே வாசித்து முடித்தேன். 2023 மார்ச் தமிழினியில் கதை வந்தபோதே படித்திருக்கிறேன். இப்போது தான் கதை எனக்கு திறந்திருக்கிறது. கதை படித்து முடித்த பின்னும் மழை கொட்டிக்கொண்டிருப்பது போன்று நாதம் கேட்டுகொண்டே இருக்கிறது. எத்தனையோ நாட்கள் வாசிக்க முயன்று முயன்று திரும்பி வந்தவன் அந்த ஒருநாளுக்குள் சாமிநாதன் உள்ளும் புறமுமாக வெகுதூரம் பயணித்து வந்திருக்கிறான். 

        அலகிலா விளையாட்டு கதையில் பதின் பருவத்தின் மனநிலையை லகுவாக கை கூடி வந்திருக்கிறது. எம் ஜி ஆர் பிறந்த நாட்களின்போது தெருவை அடைத்தபடி மேடையிட்டு நடக்கும் கட்சி நாடகங்கள் பொதுக்கூட்டங்கள் "நான் ஆணையிட்டால்" போன்ற பாட்டுகளுக்கு குறைந்த விலை எம் ஜி ஆர்களின் நடனம் போன்ற நினைவுகளை மீட்டியது. புடவியின் அலகிலா விளையாட்டு ஆச்சியை கொண்டு கபடியை கலைத்து போட்டது.

        போகன் வில்லா பல அடுக்குகள் கொண்ட கதை. சீண்டலும் பணிதலும் இரு கூர்முனைகளாக மோதியும் விலகியும் செல்வது போன்ற அனுபவம்.

        சாயை கதையில் ஒரு வகையில் தன்னை கண்டடைதலாகவும் மற்றோரு வகையில் பிராயச்சித்தமாகவும் காக்கையுடனான உறவு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. காக்கை மூத்தோர், முன்னோர் என்ற படிமம் Cliche இல்லாமல் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இறுதியில் தயாரிப்பாளருக்காக வரவழைக்கப்பட்ட காக்கை அவரது தந்தை என்றால் அவரது தந்தை, தயாரிப்பாளரின் தந்தை என்றால் தயாரிப்பாளரின் தந்தையும் கூட.

        தம்பொருள் கதையில் சொல்லாமல் வாசிப்பின் ஊகத்திற்கு விட்ட பகுதிகள் ஏராளம், கார்த்திக்கும் இந்திராணிக்கும், கந்தவேலுவின் மனைவிக்குமென்று எல்லார்க்கும் நியாயம் செய்யப்பட்டுள்ளது. கார்த்தி என்றாவது ஒருநாள் தன் வேர் என்னவென்று அறியக்கூடும். 

        நஞ்சமுது கதை மிக திறந்திருக்கிறது. தேவராஜின் மீட்சி அவனுக்கான சிறிய உலகத்தில் அவ்வப்போது பிரியானாலும் டீயினாலும் அமைகிறது.

        கடைமுகம் கதையில் வரும் இயலாமை சாவித்ரியின் மீது கோபமாக குவிந்துகொண்டே வருகிறது. உண்மையான கரிசனமும் கூட இறக்கமாக அவன் கண்களுக்கு தெரிகிறது அவன் பார்வை உடையும் தருணம் அற்புதமாக வந்துள்ளது.

        முழுத்தொகுப்பையும் இல்லாவிடினும் கூட அனாகதநாதம் கதையாவது படிக்கவேண்டுமென்று பரிந்துரைப்பேன்.

அனாகத நாதம் - தமிழினி

செந்தில் ஜெகந்நாதன் தமிழ் விக்கி

     

மனோ

15 மார்ச் 2025


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...