Skip to main content

ஸ்ரீரங்கத்து ஹொய்சாளர் கற்றளி ✨

        


       திருவரங்கம் பெருங்கோயிலில் உள்ள ஒரு கோயில் ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி. திருவானைக்காவல் குறித்த வரலாற்று குறிப்புகளுக்காக Later Chola Art என்ற SR பாலசுப்ரமணியம் அவர்களுடைய புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தபோது சோழ - ஹோய்சாள கட்டிடக்கலைகளில் சந்திப்பில் நிற்கும் சில கோயில்கள் என்ற இயலில் திருவரங்கம் கோயிலில் உள்ள வேணுகோபாலன் சந்நிதியை குறிப்பிட்டிருந்தார்.

        Later Chola Temples S R Balasubrahmanyam, Chola Pallava Phase(Later Pallavas) Part II Contributions of the later pallavas to the chola-pallava phase. 7.Srirangam
         மறுநாள் மாலை (நண்பர் வட்டத்தில் சிலர் அப்போதே சென்றிருப்பர் நான் Late) சென்று வந்தேன். கூட்டத்தில் வழி தவறி திரியும் குழந்தையை போல் நின்று கொண்டிருக்கும் கோயில். ஹொய்சளர்களின் காலகட்டம் 11-14ம் நூற்றாண்டிற்குள் இந்த சந்நிதி எழுப்பப்பட்டிருக்க கூடும். சோழ பேரரசின் பிற்பகுதி அல்லது பிற்கால பாண்டியர் ஆட்சியின் தொடக்கம். SRB இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"Thus the hoysala period marks a phase of considerable activity in the field of temple-building and their pre-occupation with the pandyas did not prevent them from promoting this activity".

        திருவரங்கத்தின் நான்காம் பிரகாரத்தில் (அகலங்கன் திருவீதியின்) தென்கிழக்கு மூலையில் உள்ளது வேணுகோபாலன் சந்நிதி. (24 மணி நேர அன்னதான கூடத்திற்கு அருகில் என்பது தற்போதைய landmark). முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பை கொண்டுள்ளது. தற்போதிருக்கும் விமானம் பிற்காலத்திய சுதை கட்டுமானம். கருவறையில் குழந்தை கண்ணனுடன் சில பிற்காலத்திய ஐம்பொன் திருமேனிகளையும் எழச்செய்துள்ளனர். அர்த்தமண்டப விதானத்தில் சில ஓவியங்கள் உள்ளன. பேளூர் ஹளபீடு பகுதிகளில் இருப்பது போன்ற soapstone கற்கள் அல்ல இங்குள்ளவை. இப்பகுதியின் கருங்கற்களை கொண்டு ஹொய்சாள பாணியில் அமைக்கப்பட்ட கற்றளி.

        பேளூர் சென்னகேசவ கோயிலில் உள்ளது போன்ற சுவர் முழுக்க சிற்பங்களால் அல்லாது, பெரியதும் சிறியதுமான கோஷ்டங்களும் கும்ப பஞ்சரங்களும் மட்டும் பாதவர்கத்தில் காணப்படுகின்றன. விமானத்தை கைலாய கிரியாகவும் அதில் விழும் மழை நீர் ஆகாய கங்கையாகவும், அவற்றை கும்ப பஞ்சரங்கள் சேமிப்பதாகவும் அமைப்பது மரபு. அதனால் கும்ப பஞ்சரங்கள் நிறைந்து வழிவது போலவும் அவற்றிலிருந்து நீர் தாவரங்கள் வளர்வது போன்றும் சில கற்றளிகளில் அமைத்திருப்பர். இங்கும் அந்த அமைப்பும், குட்டியஸ்தம்பங்கள் பல அடுக்குகளுடனும் காணப்படுகின்றன. SRB அவர்கள் இந்த கோயிலை சோழ - ஹொய்சள பாணி கோயில் என்று வகைப்படுத்துகிறார். 

        சூர்ய அஸ்தமனம் இயற்கையின் ஆதி அதிசயம். வெண்முரசில் தற்போது காண்டீபம் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை ஒரு 5000 பக்கங்கள் கடந்திருப்பேன். தத்துவர்த்தமான, நாடகீய தருணங்கள் அநேகம் ஒருந்தாலும் நினைவில் தேன் போன்று இன்றும் இருக்கும்  ஒரு அத்தியாயம் பீமன், இடும்பி, கடோத்கஜன் மூவரும் ஒன்றாக மரத்தடியில் பிரயாகை - 63 அஸ்தமனம் பார்ப்பது. ஒரு கண் இமைப்பிற்குள் ஆயிரம் ஓவியம் வரைந்து அழிக்கப்பட்டிருக்கும். சிற்பங்களை பார்ப்பதற்கு அந்த அந்தி பொழுதை போன்ற இனிய தருணம் இல்லை. ஒவ்வொரு கற்துகளும் முகிழ்க்கும் தருணம். Hot Hotter Hottest என்ற திருச்சியின் மூன்று பருவங்களில் இப்போது Hottest. மாலை அஸ்தமனங்கள் நீண்டிருக்கும்

        கிழக்கு நோக்கி அமைந்த சந்நிதியின் பின் புற கோஷ்டத்தில் உள்ள வேணுகோபாலன் செந்தூர மாம்பழ ஜொலித்தார்.  சிறு கோஷ்டத்தையும் கூட முழு கற்றளி அளவிற்கே உபபீடம், ஆதிஷ்டானம்,  பாதவர்கம், பிரஸ்தாரம், கண்டம், கலசம், சிகரம் என்று அனைத்து உறுப்புகளுடன் செதுக்கியுள்ளனர். ஜாலகங்களும் அலங்காரமாக அமைந்துள்ளன. 

        அதிஷ்டானத்தில் உள்ள சிறிய கோஷ்டங்களில் மத்ஸ்ய, வராக, நரசிம்ம, தசாவதார சிற்பங்கள் அமைந்துள்ளன. யசோதையுடன் கண்ணன், ஹயக்ரீவர், தும்புரு சிற்பங்கள் அமைந்துள்ளன. உபபீடத்து புடைப்பு சிற்பங்களாக போர் வீரர்கள், யானைகள், கின்னரர்கள் உள்ளன. 

        பிதுக்கங்களில் கோபியர் மற்றும் நடன மங்கையர் சிற்பங்கள் உள்ளன. கையில் கிளியுடன் தமிழம் போன்ற சிகை அலங்காரத்துடன் அமைந்துள்ள நடன மங்கை சிற்பமும், சந்நிதிக்கு பின்புறம் உள்ள கையில் கண்ணாடி வைத்திருக்கும் சிற்பமும் அற்புதமானவை. சிற்பங்களில் உள்ள ஆடை அணிகலன்களும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சந்நிதியை ஒட்டியபடி இடதுபுறம் பிற்காலத்தில் புதிய மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. 

        உரலில் கண்ணனை கட்டிவைத்தல், கோபியருடன் கண்ணன், காளிங்க நர்த்தனம், துவார பாலகர்கள், அனுமன், கருடன் என்று 50க்கும் மேற்பட்ட குறுஞ்சிற்பங்கள் உள்ளன. 

        1311ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதி, மாலிக் கஃபூர் தென்னக படையெடுப்பு நிகழ்ந்தது. இந்த சந்நிதி படையெடுப்பிற்கு முன்பு எடுக்கப்பட்டதா அல்லது பின்பு எடுக்கப்பட்டதா என்று குறிப்பிட இயலவில்லை. 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிற்பியுடன் நடந்த உரையாடலை முரளி காப்பியுடன் முடித்து வீடடைந்தேன்.

வெளி இணைப்புகள் 

1. ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு - jeyamohan.in 

2. Later CholaTemples SRB - Archive.org








        



       



        



        

        

        



        

        

        






       

         

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...