Skip to main content

இந்திய பயணம் நூல் வாசிப்பனுபவம் 🤍

இந்திய பயணம் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்கள் 2008ம் ஆண்டு ஈரோட்டிலிருந்து காசி வரைக்கும் செய்த பயணத்தின் பயணக்கட்டுரை நூல்.



வரலாறு மற்றும் இலக்கியத்திற்கு இணையாகவே பயணக்கட்டுரைகளும் சுவாரசியமானவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் முற்றிலும் புதிதாக நிகழும் காட்சிகள், மனிதர்கள், உணவு, கால நிலை, மொழி என்று ஒவ்வொரு மின்னல் வெட்டாக வந்து போகும் பின்புலங்கள். அத்தனை மின்னல் வெட்டுகளுக்கும் பொதுப்பண்பாக ஒளி கீற்று ஒன்றிருப்பது போன்று தோன்றும்.

முன்பு சிட்டி, தி ஜா வின் நடந்தாய் வழி காவேரி கட்டுரை, ஏ கே செட்டியாரின் பயணக்கட்டுரைகள், தொ.மு பாஸ்கர தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை நூலின் சில கட்டுரைகள், சமீபத்தில் S ராமகிருஷ்ணனின் தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைகளை படித்திருக்கிறேன்.

இந்திய பயணம் நூல் 20 நாட்களுக்குள் சில நகரங்களை மட்டும் கண்டு செல்லும் சிறிய பயணம் குறித்த அனுபவங்கள், அவதானிப்புகள் அடங்கிய தொகுப்பு. பயணக்கட்டுரைகளில் காட்சி அனுபவங்கள் மட்டும் அன்றி இடை இடையில் வரும் இலக்கிய வரிகளுக்காக வாசிக்கலாம், அந்த நிலக்காட்சி, மனிதர்கள், மொழி, போன்ற பருவடிவங்கள் ஆழ் மனதில் பதிந்து அப்போது பூக்கும் பூவாக சில வரிகள் எழும். அவை முக்கியம். உதாரணமாக 

"இருள் பிரியா நேரத்தில் ஒரு ஊரை விட்டு விளங்குவதில் கவித்துவமாக ஏதோ ஒன்று உள்ளது" என்ற வரி வெண்முரசில் ஒரு அத்தியாயத்தில் வைக்க தக்கது.

மேலும் தாரமங்கலம் கட்டுரையில் "ஊர் திரும்பும்போது அனேகமாக ஆழமான அமைதி நிலவும், அந்த அமைதி தான் நாம் பயணங்களில் ஈட்டுவது".

"நாயை கண்டு மரத்தில் ஏறிக்கொள்வது போலத்தான் அக்கால ஆட்சியாளர்கள் குன்றுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்"

"மண்ணுக்கு ஆத்மா போல ஓடும் இப்பெருநதிகள் அன்றி கண்முன் தெரியும் தெய்வங்கள் பிறிதில்லை என்று உணர்ந்திருந்தார்கள் முன்னோர்"

இந்த கட்டுரைகள் அனைத்து அன்றன்றைக்கே எழுதி வலைதளத்தில் பதிவேற்றப்பட்டவை, ஆகவே அளவில் சிறிய கட்டுரைகள். சுடச்சுட வாசிக்க கிடைத்தவை என்றும் சொல்லலாம்.

இந்த பயணத்தில் கோயில்கள் முக்கிய நிறுத்தங்களாக அமைந்துள்ளன. சில கோயில்களை விவரிக்கும்போது, அவற்றை குறித்த வரலாற்று பின்புலமும் விவரிக்கப்பட்டுள்ளது. லெபாக்ஷி கோயில் வரும் கட்டுரையில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தை, மாலிக் கஃபூர் படையெடுப்பிற்கு பின் வித்யாரண்யர் சுவாமிகள் ஹரிஹரர், புக்கர் இருவரையும் மீண்டும் மதம் மாற்றி விஜயநகரம் என்னும் பேரரசு தொடங்கப்பட்ட வரலாற்றை விவரித்துள்ளார்.

ஒரு பேரரசு கண் முன் எழுந்து வரும் சித்திரத்தை அளிக்கும் அதே கட்டுரையில் சிவா ஒரு ஆலமரத்தில் ஆடியதையும் விவரித்துள்ளார். இந்த இருமை வாசிப்பை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஒரு சக பயணி என்பதால் போற போக்கில் சொல்லும் சில கவிதைக்கு இணையான அல்லது கவிதை வரிகள் குறிக்கப்பட்டுள்ளன. 

பயணக்கட்டுரைகளில் பல, சமயங்களில் நமது பயண அனுபவங்களை தொட்டெடுக்கும். காகதீய பேரரசின் நல்கொண்டா விமானங்களை அடுக்கடுக்கான சாளுக்கிய பாம்சன  விமானங்களுடன் பொருத்திப்பார்க்க முடிந்தது.

ஈரோட்டில் தொடங்கிய பயணத்தை, தாரமங்கலம், லெபாக்ஷி, பெனுகொண்டா, நல்கொண்டா, வாரங்கல், தர்மபுரியில்,சாஞ்சி,காசி என்று முக்கிய நகரங்கள் அனைத்தையும் தொட்டு சென்றுள்ளனர்.

சாஞ்சி ஸ்தூபியை குறித்த கட்டுரை மற்ற கட்டுரைகளை காட்டிலும் மிக நெருக்கமான ஒன்று. நல்லதொரு வாசிப்பனுபவத்தை கொடுத்த முக்கியமான நூல்.


Comments

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...