மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள்
நண்பர் லால்குடி தினேஷ் எழுதிய ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களின் "மரக்கடை மாமியார் முதலிய கதைகள்" நூலின் மதிப்புரை.
தமிழில் செவ்வியல் இலக்கியம் எந்த அளவு உள்ளதோ அதே அளவிற்கு நாட்டார் இலக்கியமும் உள்ளது. சுவடிகளில் மறைந்து கிடந்த செவ்விலக்கியத்தை தேடிக் கண்டடைந்து பதிப்பிக்கப்பட்டு அதன் மறுமலர்ச்சி உருவான காலத்திற்கு சற்று பிந்தி நாட்டார் இலக்கியமும் அதிக அளவில் பதிப்பிக்க படுகிறது.
அதில் முதலில் நாட்டார் மரபில் வாய்மொழியாக பல வடிவங்களில் உலவும் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டார் ஆய்வுகள் என நீளும் மரபில் இப்போது இருக்கும் பெரும் ஆளுமை அ.கா.பெருமாள் அவர்கள். அவர் தொகுத்த 29 கதைகள் அடங்கிய நூல் இது. இதை பரிசல் புத்தக நிலையம் 2024-ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை அ.கா.பெருமாள் அவர்களுக்கு தோல் பாவை கூத்து கலைஞர்கள் சுப்பையா ராவ் மற்றும் பரமசிவராவ் கூறியுள்ளனர்.
அ.கா.பெருமாள் இந்த இரு கலைஞர்களுடனும் நெருங்கி பழகி அவர்களோடு கூத்து நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றுள்ளார். அப்போது அவர்கள் நேரிடையாக பல கதைகளை அதன் பல்வேறு வடிவங்களை அ.கா.பெருமாளுக்கு கூறியுள்ளனர். மேலும் நாட்டார் கதை சேகரிப்பாளர் கழனி ஊரான், தேவதாசியான சின்னகுட்டி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வா.அய்.சுப்பிரமணியம் ஆகியோர் பல கதைகளை அ.கா.பெருமாள் அவர்களுக்கு கூறியுள்ளனர். அது மட்டுமின்றி அவர் கீழ்காணும் நூல்களில் இருந்தும் பல கதைகளை படித்துள்ளார்.
1912-ல் திருநெல்வேலி லோகாம்பாள் பதிப்பகம் வெளியிட்ட “கட்டுவாக்கிய கதைகள்”.
ரத்தின நாயக்கர் சன்ஸ் வெளியிட்ட கட்டுவாக்கிய கதை (1930).
ரத்தின நாயக்கர் சன்ஸ் வெளியிட்ட வேடிக்கை கதைகள் (1939).
ஸ்ரீ மகள் கம்பெனி வெளியிட்ட பழங்கதைகள்(1962) தொகுப்பு.
திருச்சி அஞ்சனா பிரஸ் வெளியிட்ட கதைகதையாம் காரணமாம் (1936) தொகுப்பு.
தோல் பாவை கூத்தில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதர புராணங்கள் தான் பெரும்பாலும் நடத்தப்படும். அதில் இத்தகைய கதைகள் வருவதற்கு அதிக இடமில்லை எனவே கூத்து இடைவெளியில் உச்சிக்குடும்பன் மற்றும் உளுவத்தலையன் என்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் தோன்றி இத்தகைய வேடிக்கை கதைகளை கூறும்படி அமைப்பர். இந்த பழக்கம் தோல் பாவை கூத்தில் மட்டுமல்ல கரகாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைகளிலும் இத்தகைய நகைச்சுவை கதைகளை இடையிடையே கூறுவர். இந்த கதைகளின் பேசுபொருளாக இருப்பவை மறதி, மந்த புத்தி, மனிதர்களின் அறியாமை, பொறாமை, கேலி, பிடிவாதம், கணவனை கொடுமை படுத்தும் மனைவி, சோரம் போகும் மனைவி என நமது அன்றாட வாழ்க்கை சுழற்சியில் நாம் காணும் கருக்களே உள்ளன. பல கதைகள் தேர்ந்த கதைச் சொல்லியால் தகுந்த திருப்பங்களுடன் அமைந்தவை போலும் பல கதைகள் எந்த திருப்பமுமின்றி நேரிடையாகவும் அமைந்துள்ளது.மேலும் இக்கதைகள் சொல்லப்படும் சூழல் மற்றும் சொல்பவரின் கற்பனை சார்ந்து புதுப் புது வடிவங்கள் எடுக்கின்றன. ஒரே கதை அக்பர்-பீர்பால் கதையாகவும் தெனாலி ராமன் கதைகயாகவும் வருகிறது. சில கதைகள் மகாபாரதத்தில் கூட இடம்பெற்றுள்ளது. அவை செவ்வியலிலிருந்து நாட்டார் இலக்கியத்திற்கு சென்றதா அல்லது நாட்டார் கதையில் இருந்து செவ்வியல் கதையாக வந்ததா என்று தெரியவில்லை.
இந்த தொகுப்பின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு கதையையும் எவ்வாறு அ.க.பெருமாள் முதலில் கேள்விப்பட்டார் என்ற சம்பவத்தை துல்லியமாக குறிப்பிடுகிறார். அது படிக்க மிக சுவாரஸ்யமாக உள்ளது. உதாரணமாக “நல்லா தெரியுது” என்றோரு கதை இது சற்று பாலியல் தன்மையான கதை, இக்கதையை தோல் பாவை கலைஞர் பரமசிவராவ் ஒரு ஊரில் சொல்கிறார் அடுத்த நாள் அதே கதையை வைத்து ஊர் பையன்கள் பரமசிவராவின் அக்கா மகளை கேலி செய்கிறார்கள். அன்றோடு அவர் இந்த கதை சொல்வதை நிறுத்திக் கொண்டார்.
இன்னோரு கதை “வாய் கொழுப்பு சீலையில் வடிகிறது” இந்த கதை வாய் கொழுப்பால் ஒருவருக்கு நேரும் விபரீதம் பற்றியது. ஒருமுறை பரமசிவராவ் திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள கிராமத்தில் தலித் பிரமூகர் ஒருவரின் ஏற்பாட்டில் தோல் பாவை கூத்து நடத்துகிறார் அப்போது கூத்துக்கு இடையில் பரமசிவராவ் தனக்கு பணம் கெடுத்து உதவிய அந்த தலித் பிரமூகரை “கொடை கொடுப்பதில் இவர் வானத்து தேவர்களுக்கு சமமானவர்” என்று புகழ்ந்து விடுகிறார். அதை கேட்ட அந்த கிராமத்து நிலவுடைமை சமுகத்தை சேர்ந்த ஒருவர் சட்டென கூத்து திரையை வேல் கம்பால் கிழித்து கூத்தே நடக்க விடாமல் செய்து விடுகிறார்.
நாம் திரைப்படங்களில் சாதரணமாக கேட்கும் ஒரு வார்த்தை “டொமர்” என்பது, பிறரை திட்ட பயன்படுத்தபடும் இவ்வார்த்தை வசைச் சொல் அல்ல தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட கழை கூத்தாடும் சமுகத்தின் பெயர். எளிய மக்களின் சமுகப்பெயரை இத்தனை நாள் நமக்கே தெரியாமல் ஒரு கேலியான வசைச் சொல்லாக பயன்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு கதைக்கும் ஆசிரியர் சொல்லும் சம்பவங்கள் தான் இந்த தொகுப்பை பிற நாட்டார் கதை தொகுப்பில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. “பொண்டாட்டி வருகிறாள் துடைப்பை கட்டையுடன்” என்றொரு கதை இத்தொகுப்பில் உள்ளது அதில் கணவனை தினமும் அவன் மனைவி துடைப்பை கட்டையால் அடிக்கிறாள், கணவன் ஊருக்கு போகும் போது அவன் நட்டு வளர்த்த மரத்தை தன் தம்பியாக கருதி அதை அடிக்கும்படி கூறிவிட்டு செல்கிறான்.
இதில் வரும் அதே கருத்து “நற்றினையின் 172 வது பாடலில்” தலைவி ஒருத்தி தான் நட்டு வளர்த்த மரத்தை தன் தங்கை என்றும், எனவே இந்த மரத்தடியில் நாம் கூட வேண்டாம் என்று தலைவனிடம் கூறுகிறாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட சங்க பாடலில் வரும் உணர்வுநிலை இப்போது பாடப்படும் நாட்டார் பாடலிலும் தொடர்ந்து வருவது தமிழ் சமுகத்தின் ஈராயிரம் ஆண்டு பண்பாட்டுத் தொடர்ச்சியை காட்டுகிறது.
lalgudidinesh@gmail.com
அ கா பெருமாள் தமிழ் விக்கி - விக்கி சுட்டி
Comments
Post a Comment